Monday 16 December 2013

மகத்துவம் மிகுந்த மார்கழி மாதம்!

மாதங்கள் எல்லாவற்றிலும் மார்கழிமாதம் சிறந்தது என்று இந்து மதம் கூறுகின்றது. மார்கழியை ஜோதிட சாஸ்திரம் தனூர் மாதம் என்கிறது. மார்க்கசிரம் என்பது மிருகசீரிடம் என்னும் நட்சத்திரத்தைக் குறிக்கும். சந்திரன் மிருகசீரிட நட்சத்திரத்தில், கலைகள் பதினாறும் பூர்த்தியாகி பவுர்ணமி ஆனதால் மார்கழி எனவும், சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால் தனுர் மாதம் எனவும் கூறப்படுகிறது.

மார்கழி மாத நாட்கள் முழுவதும் மிகவும் விசேஷமானவை. நாள்தோறும் சகல சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும்.

மக்கள் யாவரும் அதிகாலையில் துயில் எழுந்து, வீடுகளை சுத்தம் செய்து, உடல் நீராடி, வீட்டு வாசல்களில் அழகிய கோலங்கள் போடுவார்கள். கோலத்தில் மார்கழி பிள்ளையார் வைத்து புஷ்பங்கள் இட்டு, ஆலயம் சென்று இறைவனை வழிபடுவார்கள். இந்த மாதத்தில் மக்கள் அனைவரும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க பார்க்க முடியும்.

மனிதர்களுக்கு ஒரு நாள், 60 நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்). பகல் 30 நாழிகை, இரவு 30 நாழிகை. மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி இரவுக் காலம் முடிகிற தேவர்களின் வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன.

மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும். ஒரு நாளின் முக்கியமான பாகம் வைகறைப் பொழுது என்றால் அது மிகையாகாது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மார்கழியில்தான் இறைவனை அதிகமாக வழிபடும் நிகழ்ச்சிகள் வருகின்றன. மகாபார யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. திருப்பாற்கடல் கடையப்பட்டதும், முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில்தான்.

இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு.

எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள்நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம் என்னும் சிறப்பு மிக்க மாதத்தில் தான். இவ்வாறு பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம்.


மார்கழி மாத அதிகாலைப் பொழுதில், மக்கள் அனைவரும் காத்திருந்து அம்மையப்பன் அருள்பெற்று சகல காரியங்களும் இடையூறின்றி இனிதே நிறைவேற பிரார்த்தனை செய்கின்றனர். இந்த நேரத்தில்தான் சிதம்பரம் நடராஜர் ஐந்தொழில்களையும் புரிகின்றார்

No comments:

Post a Comment